செய்திகள்
கோப்புபடம்

கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி வாலிபர் கொடுத்த மாத்திரையை தின்ற பெண் பலி

Published On 2021-06-27 09:21 IST   |   Update On 2021-06-27 09:21:00 IST
கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை வாங்கி தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணகவுண்டர் (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி மல்லிகா (58), மகள் தீபா (30). தீபாவுக்கு திருமணம் ஆகி கணவர் பிரபு (வயது 35) என்பவருடன் தனது தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர்களுக்கு லோகித் (4) என்ற மகனும், லட்சிதா (1) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை தீபாவின் கணவர் பிரபு சென்னிமலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் கருப்பணகவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் இரு குழந்தைகளும் வீட்டில் இருந்தனர்.

அப்போது இவர்களுடன் தோட்டத்தில் வேலை செய்யும் குப்பம்மாள் (65) என்ற பெண் மற்றும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) ஆகியோரும் இருந்துள்ளனர். காலை 8 மணிஅளவில் சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் அங்கு வந்து கருப்பணகவுண்டர் வீடு இதுதானே என்று கேட்டுள்ளார். அதற்கு வீட்டில் இருந்தவர்கள் ஆமாம் என கூறியுள்ளனர்.

அப்போது அந்த வாலிபர், நான் உங்களை கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளேன். பரிசோதனை செய்வதற்கு முன் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சில மாத்திரைகளை கொடுத்துள்ளார். பல இடங்களில் கொரோனா பரிசோதனை நடந்து வருவதால் இதனை அவர்கள் நம்பி விட்டனர். அந்த வாலிபர் கொடுத்த கருப்பு நிற மாத்திரைகளை கருப்பணகவுண்டர், மல்லிகா, தீபா மற்றும் குப்பம்மாள் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர்.

ஆனால் கல்யாணசுந்தரம் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்துள்ளதால் எனக்கு வேண்டாம் என கூறியுள்ளார். பின்னர் மாத்திரை சாப்பிட்ட 4 பேரையும் ஒரு கருவி மூலம் பரிசோதனை செய்த வாலிபர் யாருக்கும் கொரோனா இல்லை என கூறினார். பின்னர் தன்னை அந்த ஊரின் மெயின்ரோடு வரை கொண்டு சென்று விட்டுவிடுமாறு கல்யாணசுந்தரத்திடம் கூறி உள்ளார். உடனே அவர் மோட்டார் சைக்கிளில் மெயின்ரோடு வரை கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்.

அந்த வாலிபர் சென்ற சிறிது நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கார் மூலம் சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக இறந்தார். குப்பம்மாள் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், கருப்பணகவுண்டர், தீபா ஆகியோர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளர். நல்லவேளையாக குழந்தைகள் இருவருக்கும் மாத்திரை கொடுக்காததால் அவர்கள் தப்பித்தனர்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தாரா? ஒருவர் மட்டும் மாத்திரை சாப்பிடாததால் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் நைசாக அங்கிருந்து தப்பிச்சென்றாரா? வீட்டின் உரிமையாளர் பெயரை சொல்லி கேட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்குமா? அவர் யார்? என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News