செய்திகள்
மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனை அருகில் மெயின் ரோட்டில் நிறுத்தி விட்டு் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் அக்கம் பக்கம் தேடி பார்த்தார். அப்போது ரவிச்சந்திரனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை ஒருவர் தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இதனை கண்ட ரவிச்சந்திரன் ‘திருடன், திருடன்' என கூச்சலிட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மோட்டார் சைக்கிளை தள்ளிச்சென்ற அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பிடிபட்டவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியவர் மயிலாடுதுறை கூறைநாடு வடக்கு சாலியர் தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேசன் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், வெங்கடேசனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.