செய்திகள்
தற்கொலை

கொரோனாவுக்கு கணவர் இறந்ததால் சோகம்- மகன், மகளை கொன்று இளம்பெண் தற்கொலை

Published On 2021-06-25 14:13 IST   |   Update On 2021-06-25 14:13:00 IST
ஈரோட்டில் கணவர் கொரோனாவுக்கு இறந்ததால் மனமுடைந்த இளம்பெண், மகன், மகளுக்கு உணவில் விஷமாத்திரை கலந்து கொடுத்து தானும் சாப்பிட்டு உயிரிழந்தார்.
ஈரோடு:

ஈரோடு திண்டல், லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (67) ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருக்கு ஹரிஹரன் என்ற மகனும், நித்யா, ரம்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

மூத்த மகள் நித்யாவிற்கு சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாஸ்கர் சென்னையில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ்கிருஷ்ணன் (6) என்ற மகனும் உள்ளனர். மகதி மாங்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பும், யாதவ் கிருஷ்ணன் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நல்லபடியாக சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கை கொரோனா என்ற கொடிய நோயால் சின்னா பின்னமாகி விட்டது.

கடந்த மாதம் 2-ந் தேதி பாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் கடந்த மாதம் 9-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்த நித்யா சரிவர சாப்பிடாமலும், யாரிடமும் பேசாமலும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

கணவர் இறந்ததால் நித்யா தனது மகன், மகளுடன் திண்டலில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார். நித்யாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் கணவர் பிரிவைத் தாங்க முடியாத நித்யா தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி நேற்று மதியம் உணவில் வி‌ஷ மாத்திரையை கலந்து மகள் மகதிக்கும், மகன் யாதவ் கிருஷ்ணனுக்கும் கொடுத்து தானும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு உள்ளார். பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு மகன், மகளுடன் சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார்.

நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் நித்யாவின் தந்தை பார்த்தசாரதி கதவை தட்டினார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகியோர் மயங்கி கிடந்தனர். அந்த அறையில் வி‌ஷ மாத்திரை கிடந்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News