செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ஆட்டோகிராப் வாங்கிய மாணவன்

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ஆட்டோகிராப் வாங்கிய மாணவன்

Published On 2021-06-25 07:36 GMT   |   Update On 2021-06-25 07:36 GMT
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சகோதரி உடல்நல பாதிப்பால் கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்தார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மாணவர்கள் மீது பற்று கொண்டவர். ரங்கசாமியை மாணவர்கள் சந்தித்து கல்வி உதவி கேட்கும்போது தனது சொந்த நிதியை வாரி வழங்குவார்.

இந்த நிலையில் ரங்கசாமியின் சகோதரி உடல்நல பாதிப்பால் கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பேராவூரில் அவரின் இறுதிச்சடங்கு நடந்தது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.

அப்போது அவ்வூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். அவர்களுக்கு ரங்கசாமி ஆசி வழங்கினார்.



இந்நிலையில் நேற்று மீண்டும் அதே ஊருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்று தனது சகோதரியின் 16-வது நாள் காரியத்தில் பங்கேற்றார்.

நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட தயாரானபோது ஒரு மாணவன் ஓடி வந்தான். இதைக்கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி காரில் இருந்து இறங்கி, என்ன வேணும்? என கேட்டார். அவன் ஒரு நோட்டை நீட்டி ஆட்டோகிராப் வேண்டும் என கேட்டான். உடனே ரங்கசாமி அந்த நோட்டை வாங்கி, நல்வாழ்த்துக்கள். படி..படி..படி.. முன்னேறலாம்.. ந.ரங்கசாமி என கையெழுத்திட்டு கொடுத்தார்.

அதனை ஆர்வமாக வாங்கிச்சென்ற சிறுவன் தனது சக நண்பர்களிடம், முதல்-அமைச்சர் கையெழுத்து என காட்டி பெருமிதம் கொண்டான்.
Tags:    

Similar News