செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா சிகிச்சை மையத்தில் காலியான படுக்கைகள்

Published On 2021-06-23 10:04 GMT   |   Update On 2021-06-23 10:04 GMT
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 9 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

கடந்த 12 நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதுபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1855 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 5ஆயிரத்து 942 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 9 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேப்போல் மாவட்டம் முழுவதும் 4,032 பேர் வீட்டு தனிமையில் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 89 சதவீதம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 11 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு சதவீதம் பேர் இறந்துள்ளனர்.

தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் காலியாகி வருகின்றன. தற்போது 4331 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News