கிருமாம்பாக்கம் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
பாகூர் அருகே காட்டுக்குப்பம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் வாழைப்பழம் மற்றும் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது தந்தை கோபால கிருஷ்ணன் (வயது 87). இவர் தனது மகன் ஜானகிராமன் பராமரிப்பில் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக கோபாலகிருஷ்ணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இதற்காக நாட்டு வைத்தியமும் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபாலகிருஷ்ணனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீட்டின் தோட்டத்துக்கு சென்று அங்குள்ள தென்னை மரத்தில் ஏணி வைத்து ஏறி தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் ஜானகிராமன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.