உருளையன்பேட்டையில் வீட்டில் கற்களை வீசியதை தட்டிக்கேட்ட தனியார் நிறுவன ஊழியருக்கு கத்தி குத்து
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவதீனன் (வயது49). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
தேவதீனன் வீட்டின் அருகே சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கடந்த மாதம் தேவதீனனின் வீட்டு ஜன்னலை கற்களை வீசி உடைத்து விட்ட நிலையில் நேற்று மீண்டும் தேவதீனன் வீட்டின் மீது சுந்தர்ராஜன் மகன் கற்களை வீசினான்.
இதனை தேவதீனன் தட்டிக்கேட்டார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டிய சுந்தர்ராஜ், அவரது மகன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து தேவதீனனை தலையில் வெட்டினார். அப்போது அதேபகுதியை சேர்ந்த அலோந்தோன் மற்றும் தேவதீனனின் தம்பி அருணாசலம் ஆகியோர் தட்டிக்கேட்ட போது அவர்களை சுந்தர்ராஜனும், அவரது மகனும் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்கள்.
மேலும் இனிமேல் என்னிடம் வைத்துக் கொண்டால் உங்களை கொலை செய்துவிடுவேன், நான் மைனர் என்பதால் என்னை போலீஸ் ஒன்றும் செய்துவிடாது என்று சுந்தர்ராஜன் மகன் மிரட்டினான்.
இந்த தாக்குதலில் காயமடைந்த தேவதீனன் மற்றும் அலோந்தோன், அருணாசலம் ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து தேவதீனன் உருளையன்பேட்டை போலீசில்புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தர்ராஜன் மற்றும் அவரது மகனை தேடி வருகிறார்கள்.