செய்திகள்
கிராமத்தில் காட்டுப் பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட பருத்தி மற்றும் சோள பயிர்களை படத்தில் காணலாம்.

கொள்ளிடம் அருகே சோளம், பருத்தி பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை

Published On 2021-06-19 21:45 IST   |   Update On 2021-06-19 21:45:00 IST
கொள்ளிடம் அருகே சோளம், பருத்தி பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் வில்லவந்தான்கட்டளை, முக்காணி, கீழமாத்தூர் ஆகிய இடங்களில் விவசாயிகளுக்கு சொந்தமான 20 ஏக்கர் சோளப்பயிரை இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. சோள பயிரை ஒட்டி பயிரிடப்பட்டுள்ள பருத்தி பயிரையும் பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து எருக்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறுகையில், ‘எருக்கூர் அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயல்படாத காகித ஆலை கட்டிடம் ஒன்று உள்ளது. அதனை ஒட்டி அடர்ந்த காடு உள்ளது.

அங்கு கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் தங்கி உள்ளன. அவை இரவு நேரங்களில் பருத்தி மற்றும் சோளப்பயிர்களை சேதப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இரவு நேரத்தில் அவற்றை விரட்டி அடிப்பதற்கும் சிரமமாக உள்ளது. காட்டுப்பன்றிகள் வயல்களுக்குள் புகுவதை தடுத்து அவற்றை வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Similar News