செய்திகள்
சந்திரபாடி கடலில் மூழ்கி இறந்த தீபக்கின் உறவினர்கள் கதறி அழுததை படத்தில் காணலாம்.

மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடல் மீட்பு - கடலோர காவல் போலீசார் விசாரணை

Published On 2021-06-19 21:39 IST   |   Update On 2021-06-19 21:39:00 IST
மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கடலோர காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொறையாறு:

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவர் காலனியை சேர்ந்த வீரகாளி என்பவர் மகன் தீபக் (வயது 20). இவர் சக மீனவர்களான சின்னசாமி, சுந்தரகுமார் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 16-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் சந்திரப்பாடியில் இருந்து மத்தி மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கரையில் இருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, திடீரென தீபக்கை காணாது மற்ற மீனவர்கள் திடுக்கிட்டனர். இதையடுத்து கடலில் தேடி பார்த்தனர் ஆனால் தீபக்கை காணவில்லை. தீபக் மாயமானதால் தரங்கம்பாடி கடலோர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் சந்திரபாடி மீனவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடும் பணியை தீவிரப்படுத்தினர். நேற்று அதிகாலை தரங்கம்பாடி அருகே மீனவர் தீபக்கின் உடல் நடுக்கடலில் மிதந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரப்பாடியில் மீனவ இளைஞர் கடலில் மூழ்கி இறந்தது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News