பவானிசாகர் அணை நீர்மட்டம் 90 அடியாக உயர்வு
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது கடந்த 6 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு 10 ஆயிரத்து 178 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 90.98 அடியாக உயர்ந்தது. அணைக்கு தொடர்ந்து இதே அளவில் நீர்வரத்து இருந்தால் விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்டும். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக அணையை கண்காணித்து வருகின்றனர்.
பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.