செய்திகள்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பரங்கிப்பேட்டை:
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட புதிய ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் வேலையில் ஈடுபட்டவர்களிடம் பணியில் எந்தவித சுணக்கம் காட்டாமல் வாய்க்காலை அகலமாகவும், ஆழமாகவும் தூர்வாருதுடன், வேளாண் பாசனத்திற்கு தண்ணீரை முழுமையாக பயன்படும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது, உதவி பொறியாளர் குமுதா மற்றும் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ராதிகா, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, ஊராட்சி செயலாளர் முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து, கொத்தட்டை, சேந்திர கிள்ளை ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டம் தொடர்பான பணிகளையும் கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆய்வு செய்தார்.