அம்மாபேட்டை அருகே புளிய மரத்தில் வேன் மோதி பஸ் டிரைவர் பலி
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் நாடார் வீதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 46). ஒட்டபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (36). இவர்கள் இருவரும் அரசு பஸ் டிரைவர்கள்.
இந்த நிலையில் அன்பழகன் முதுகுவலி காரணமாக தர்மபுரி அருகே உள்ள நல்லாம்பட்டிக்கு டாக்டரை சந்திப்பதற்காக ஒரு ஆம்னி வேனில் அன்பழகன் மற்றும் சதீஷ் ஆகியோர் சென்றனர்.
இருவரும் நல்லம்பட்டி சென்று விட்டு வீட்டுக்கு அம்மாபேட்டை வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் பூதப்பாடி அண்ணா நகர் பகுதியில் வந்தனர்.
அப்போது ரோட்டோரம் உள்ள புளிய மரத்தில் ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் வேனை ஓட்டி வந்த அன்பழகன் மற்றும் சதீஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து விபத்து நடந்த இடத்துக்கு அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் வந்து அவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அன்பழகன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சதீஷ் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.