மாணவிகள் வாட்ஸ்-அப் குரூப்பில் ஆபாசப்படம் அனுப்பிய கூலி தொழிலாளி கைது
சித்தோடு:
பவானி, சித்தோட்டில் தமிழ் மன்றம் என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப்பை தமிழ் ஆசிரியர் கலைச்செல்வன் என்பவர் உருவாக்கி இருந்தார். இந்த குரூப்பில் முன்னாள் மற்றும் தற்போது படிக்கும் மாணவிகள் 227 பேர் இணைக்கப்பட்டு இருந்தனர்.
பள்ளி மாணவிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல் பகிர்ந்து கொள்ள இந்த வாட்ஸ்-அப் குரூப் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி நள்ளிரவில் இந்த வாட்ஸ்-அப் குரூப்பில் ஒரு செல்போன் எண்ணில் இருந்து ஆபாசப்படம் பகிரப்பட்டு இருந்தது. இதனை பார்த்து மாணவிகள் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள ஒரு மாணவியின் பெற்றோர் ஆபாசப்படம் அனுப்பிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில் சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகைய்யன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆபாசப்படம் அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஈரோடு, கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) கூலி தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வாட்ஸ்அப் குரூப்பில் பொன்னுசாமிதான் ஆபாச படம் அனுப்பியது தெரியவந்தது. மதுபோதையில் ஆபாச படத்தை அனுப்பியதாக போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள மாணவிகள், பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.