செய்திகள்
கோப்புபடம்

விருத்தாசலம் அருகே திருமண வீட்டில் நகை - பணம் கொள்ளை

Published On 2021-06-14 19:09 IST   |   Update On 2021-06-14 19:09:00 IST
விருத்தாசலம் அருகே திருமண வீட்டில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 54). இவரது மகன் தர்மராஜ்(27). இவருக்கும், காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் மகள் சந்தியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று அதிகாலை 5 மணிக்கு தே.கோபுராபுரத்தில் உள்ள கோவிலில் நடைபெற்றது.

இதற்காக திருமண வீட்டார் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டனர். கோவிலில் திருமணம் முடிந்து, மணமக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மணமகன் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது அங்கு மணமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கிருந்த பீரோ உடைந்த நிலையில், அதில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கம், மற்றும் ½ பவுன் நகையை காணவில்லை. மேலும் மற்றொரு அறையில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் இருக்கிறதா? என்று பார்த்தனர். அந்த நகைகள் பத்திரமாக இருந்தன. இதனால் மணமகன் வீட்டார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மணமகன் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்த மோப்ப நாய் புருனே வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்ட அந்த நாய், சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது.

இதற்கிடையே திருமணவிழாவுக்கு வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News