செய்திகள்
கடலூர் மஞ்சக்குப்பத்தில் ரேஷன் கடை பெண் பணியாளர், வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கிய போது எடுத்த படம்.

மளிகைப்பொருட்கள் வழங்குவதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தீவிரம்

Published On 2021-06-12 23:04 IST   |   Update On 2021-06-12 23:04:00 IST
கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கடலூர்:

ரேஷன் கடைகள் மூலம் ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்த மே மாதம் பொதுவினியோக திட்டத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பை பொது வினியோகத் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரத்து 491 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வருகிற 15-ந்தேதி (செவ்வாக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

இதையொட்டி 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள 1420 ரேஷன் கடைகளிலும் ஊழியர்கள் மதியத்திற்கு பிறகு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியை தொடங்கினர். இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு 14 வகையான மளிகைப்பொருட்கள், அதை பெறுவதற்கான பைகளும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இதற்கு முன்பு 200 பேர் ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, பொருட்கள் முழுமையாக வரவில்லை என்பதால் நாள் ஒன்றுக்கு 75 முதல் 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News