செய்திகள்
கைது

கருணாநிதி குறித்து முகநூலில் அவதூறு பதிவு- பா.ஜனதா பிரமுகர் கைது

Published On 2021-06-05 15:30 IST   |   Update On 2021-06-05 15:30:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருணாநிதி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பா.ஜனதா பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). இவர் சூளகிரி தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் உத்தனப்பள்ளி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் ஜல்லிக்கட்டு பத்மநாபன் என்கிற பத்மநாபன் (42) என்பவர் இருந்து வருகிறார். அவர் பா.ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

இந்தநிலையில் மறைந்த முதல்- அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நேரத்தில், அவரது புகைப்படங்களை தவறாக சித்தரித்து, பத்மநாபன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து கேட்டபோது அவர் என்னை மிரட்டினார். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

அதன் பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரித்து பா.ஜனதா பிரமுகர் ஜல்லிக்கட்டு பத்மநாபன் என்கிற பத்மநாபனை கைது செய்தார். அவர் மிது ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் பத்மநாதன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், உத்தனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, நேற்று சமூக இடைவெளியை கடைபிடித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பத்மநாதன், கைது செய்யப்பட்டதற்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News