திருவண்ணாமலையில் ஊரடங்கின்போது வாலிபால் விளையாடிய மாணவர்கள் - ரூ.4 ஆயிரம் அபராதம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் முழு ஊரடங்கை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேற்று மாலை ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவர்கள் சிலர் வாலிபால் விளையாடிக் கொண்டிருப்பது ட்ரோன் கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.
தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல் மாணவர்கள் விளையாடி கொண்டு இருப்பதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேற்குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மாணவர்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
அதன்படி 20 மாணவர்களுக்கும் மொத்தம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையை அறிந்த மாணவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
பின்னர் அபராத தொகையை செலுத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கை திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.