செய்திகள்
எழிலரசி

குடியாத்தம் அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-25 06:36 IST   |   Update On 2021-05-25 06:36:00 IST
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனோ தொற்றுக்கு 4 டாக்டர்களும், 6 செவிலியர்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி எழிலரசி (வயது 40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கோபாலகிருஷ்ணன் பல ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். எழிலரசி கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்துப கடந்த 15-ந் தேதி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் 17-ந் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உடல்நிலை மோசமாகவே 21-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை எழிலரசி பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் எழிலரசியின் படத்தை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மாறன்பாபு தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது வரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனோ தொற்றுக்கு 4 டாக்டர்களும், 6 செவிலியர்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு செவிலியர் கடந்த ஆண்டுக்கு கொரோனோ தொற்றால் இரு முறை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த ஆண்டும் மூன்றாவது முறையாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News