செய்திகள்
தளி அருகே கோவிலில் ரூ.2 லட்சம் நகை, உண்டியல் திருட்டு
தளி அருகே கோவிலில் ரூ.2 லட்சம் நகை, உண்டியல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் பழைமைவாய்ந்த ஸ்ரீவேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே பீரோவிலிருந்த தங்க நகைகள், தங்கத்தாலி மற்றும் வெள்ளி பொருட்கள், தட்டு, சொம்பு, கிரீடம் (சடாரி), தீர்த்தம் கொடுக்கும் வெள்ளி தம்ளர் ஆகியவற்றை திருடினர். மேலும் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் முழுவதையும் திருடியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று காலையில், வழக்கம்போல அர்ச்சகர் நித்திய பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது திருட்டு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.