செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 472 பேருக்கு அபராதம்

Published On 2021-05-17 14:16 GMT   |   Update On 2021-05-17 14:16 GMT
கடலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 472 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்து வருகின்றனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்ததோடு அபராதமும் விதித்து வருகின்றனர்.

கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, தொழுதூர், ராமநத்தம் என மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் போலீசார் இரவு வரை தீவிரமாக சோதனை செய்ததில் முககவசம் அணியாமல் சென்ற 472 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். இது தவிர சமூக இடைவெளியை கடைபிடிக்காத 61 பேரிடமும் அபராதம் வசூல் செய்தனர். மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 900 அபராதம்வசூல் செய்தனர்.

மாவட்டத்தில் கடந்த 9.4. 2021 முதல் இதுவரை முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 22 ஆயிரத்து 931 பேரிடமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 633 பேரிடமும் அபராத தொகையாக ரூ.49 லட்சத்து 2ஆயிரத்து 700 வசூல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News