செய்திகள்
ஜெயபிரகாஷ்

குடியாத்தத்தில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை மரணம்

Published On 2021-05-14 17:30 GMT   |   Update On 2021-05-14 17:30 GMT
குடியாத்தம் அருகே திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை இறந்தார். துக்கம்தாங்காமல் அவருடைய தந்தையும் உயிரிழந்தார்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ராஜாகோவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 65). இவரது மனைவி ஜானகி (63). இருவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உண்டு. இளைய மகன் ஜெயபிரகாஷ் (36). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயபிரகாசுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று காலையில் ஜெயபிரகாஷ் உடல் வீட்டில் வைக்கப்பட்டு, உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். மகன் இறந்ததால் அழுதபடி இருந்த ஜெயராமன் காலை சுமார் 9 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தந்தை, மகன் இருவரின் உடல்களும் அவர்களது சொந்த ஊரான குடியாத்தத்தை அடுத்த செருவங்கி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News