வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மூச்சுத்திணறலால் தினமும் 20-க்கும் மேற்பட்டோர் பலி
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர கொரோனா சந்தேக வார்டில் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை விட மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். இவர்கள் கொரோனா சந்தேக வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆஸ்பத்திரியில் இடமில்லாததால் மூச்சுத்திணறலால் வருபவர்கள் ஆம்புலன்சில் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் கூடுதலாக ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தினசரி 20க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 5 பேர் வரை மட்டுமே இறக்கின்றனர். சுமார் 20 பேர் மூச்சு திணறலால் இறந்து வருகின்றனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் இறப்பு விட மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் வருபவர்களின் இறப்பு விகிதம் 3 மடங்கு அதிகமாக உள்ளது. பொதுமக்கள் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று விரைவில் குணம் அடைந்து விடலாம்.
மூச்சு திணறல் ஏற்பட்ட பிறகு ஆஸ்பத்திரிக்கு வருவதால்தான் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.