செய்திகள்
உஷா

கொள்ளிடம் அருகே டிராக்டர் மோதி செவிலியர் பலி

Published On 2021-05-13 11:31 GMT   |   Update On 2021-05-13 11:31 GMT
உலக செவிலியர் தினமான நேற்று செவிலியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கொள்ளிடம்:

கொள்ளி்டம் அருகே டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழந்தார். செவிலியர் தினத்தன்று நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி உடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மனைவி உஷா(வயது40). இவர் கொள்ளிடம் அருகே உள்ள எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். நேற்று உஷா எடமணல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் உமையாள்பதி கிராமத்தில் உள்ள குளத்திங்கநல்லூர் பகுதிக்கு சென்றார்.

அங்கு புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுக்க நடந்து சென்றார். அப்போது அவர் பின்னால் கரி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிராக்டர் திடீரென உஷா மீது மோதியது. இதில் உடல் நசுங்கி உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உஷா உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்து டிராக்டரை ஓட்டி வந்த நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள். உலக செவிலியர் தினமான நேற்று செவிலியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

Similar News