செய்திகள்
ஜீவானந்தம்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: அரசு கால்நடை மருத்துவர் பலி

Published On 2021-05-11 14:33 GMT   |   Update On 2021-05-11 14:33 GMT
திருமருகல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசு கால்நடை மருத்துவர் பலியானார். இதுதொடர்பாக மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி:

திருவாரூர் மாவட்டம் கே.டி.எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது39). இவர் நாகை மாவட்டம் திருமருகல் அருகே கங்களாஞ்சேரியில் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இவர் தினமும் திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கம் போல் ஜீவானந்தம் நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கங்களாஞ்சேரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கங்களாஞ்சேரி ரெயில்வே கேட் அருகே சென்ற போது எதிரே வண்டாம்பாளை வடக்கு தெருவை சேர்ந்த குஞ்சுபிள்ளை மகன் மனோகரன்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஜீவானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் இன்றி உயிர் தப்பிய மனோகரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜீவானந்தத்தின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான மனோகரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News