செய்திகள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் நடவடிக்கை - மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

Published On 2021-05-09 04:18 GMT   |   Update On 2021-05-09 04:18 GMT
கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் அவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் மற்றும் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவற்றை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.

பின்னர் பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் வகைப்படுத்துதல் மையம் அமைக்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

அதைதொடர்ந்து நிருபரகளிடம் அவர் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்பட்டு வந்த கொரோனா நோய் வகைப்படுத்துதல் மையம் சிங்கப்பெருமாள் கோவில் நகர்புற சுகாதார மையம் மற்றும் தாம்பரம் அரசு காசநோய் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

சென்னை புறநகரில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பல்லாவரத்தில் உள்ள கண்டோன்மெண்ட் ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் வகைப்படுத்தும் மையம் இன்னும் ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளது. மேடவாக்கத்திலும் நோய் வகைப்படுத்துதல் மையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோய் வகைப்படுத்துதல் மையத்தில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு உள்ள நோய் பாதிப்பை வைத்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதா? கொரோனா சிறப்பு மையங்களுக்கு அனுப்புவதா?, தீவிர சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதா? என அங்குள்ள டாக்டர்கள் முடிவு செய்வார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோய் பாதிப்பு குறைவாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள், எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அதையும் மீறி மற்றவர்களுக்கு நோய் பரவும் வகையில் வீட்டைவிட்டு வெளியில் வந்து நடமாடினால் அவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி 10 நாட்கள் அங்கு பாதுகாக்கப்பட்டு அதன் பிறகுதான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News