செய்திகள்
கைது

திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை: அக்காள்- தம்பி கைது

Published On 2021-04-26 17:09 IST   |   Update On 2021-04-26 17:09:00 IST
பெரணமல்லூர் அருகே திருமணம் செய்துவைக்கக்கோரி குடித்துவிட்டு தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அக்காள் மற்றும் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் அருகே உள்ள சஞ்சீவிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் ஏழுமலை (வயது 42). கூலித்தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவருடைய அக்காள் மஞ்சுளா (46), தம்பி திருமலை (32). இவருக்கு திருமணமாகிவிட்டது. மஞ்சுளாவுக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் தாய்வீட்டுக்கு வந்து தம்பிகளுடன் வசித்து வந்தார். ஏழுமலை தினமும் குடித்து விட்டு வந்து தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்துவந்துள்ளார்.

வழக்கம்போல நேற்றுமுன்தினம் இரவும் ஏழுமலை மதுகுடித்துவிட்டு வந்து திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மஞ்சுளாவும், திருமலையும் சேர்ந்து ஏழுமலையை கட்டையால் அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த ஏழுமலை மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் இறந்துவிட்டார்.

இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, |சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிரு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏழுமலை தடியால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ஏழுமலையை அடித்து கொலை செய்ததாக அவருடைய அக்காள் மஞ்சுளா, தம்பி திருமலை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News