செய்திகள்
தேயிலைத்தூள்

குன்னூர் ஏல மையத்தில் ரூ.15¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை

Published On 2021-04-26 10:17 GMT   |   Update On 2021-04-26 10:17 GMT
குன்னூர் ஏல மையத்தில் 13 லட்சத்து 78 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இது 93 சதவீத விற்பனை ஆகும்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் முலம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலைத்தூள் ஏலம் நடக்கிறது.

அதன்படி கடந்த 22, 23-ந் தேதிகளில்(விற்பனை எண்-16) தேயிலைத்தூள் ஏலம் நடைபெற்றது. இதற்கு 15 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 11 லட்சத்து 22 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

ஏலத்தில் 13 லட்சத்து 78 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இது 93 சதவீத விற்பனை ஆகும். இதன் ரொக்க மதிப்பு ரூ.15 கோடியே 78 லட்சம் ஆகும். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த வார விலையே நீடித்தது.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.301, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.278 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.94 முதல் ரூ.99 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.155 முதல் ரூ.173 வரையும் ஏலம் போனது.

டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.102 முதல் ரூ.107 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.201 வரை ஏலம் போனது. அடுத்த ஏலம்(விற்பனை எண்-17) வருகிற 29, 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 23 லட்சத்து 32 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.
Tags:    

Similar News