செய்திகள்
கொலை செய்யப்பட்ட ராஜஸ்ரீ

புதுவையில் கல்லூரி மாணவி கொலையில் காதலன் தம்பி கைது

Published On 2021-04-22 09:35 GMT   |   Update On 2021-04-22 09:35 GMT
புதுவையில் கல்லூரி மாணவி கொலைக்கு உடந்தையாக இருந்த காதலனின் தம்பியையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சிறுவர் என்பதால் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட உள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் கல்லூரி மாணவி கொலையில் காதலன் தம்பி கைது செய்யப்பட்டார்.

புதுவை திருக்கனூரை அடுத்துள்ள சந்தைபுதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராஜஸ்ரீ (17). இவர் சேதராப்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ராஜஸ்ரீ பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் பேட் சுடுகாட்டில் மாணவி ராஜஸ்ரீ கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தது.

மாணவி கொலை தொடர்பாக அவரது காதலன் பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த பிரதிஷை (19) போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருந்ததாவது:-

நான் ராஜஸ்ரீயை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். கடந்த ஒரு வாரமாக அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். அவர் வேறு ஒரு வாலிபருடன் பேசி வருவதாக சந்தேகம் அடைந்தேன்.

எனவே ராஜஸ்ரீயை நேரில் சந்தித்து பேச வருமாறு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தேன். அதன்படி ராஜஸ்ரீ பொறையூர் பேட் பகுதிக்கு வந்தார். அங்கு எனது தம்பியுடன் நான் காத்து இருந்தேன்.

ராஜஸ்ரீ அங்கு வந்ததும் அவரை மோட்டார் சைக்கிளில் சுடுகாடு பகுதிக்கு அழைத்து சென்றேன். அப்போது ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டேன்.

அப்போது அவர் கல்லூரியில் நண்பர் ஒருவருடன் பேசி வருவதாக தெரிவித்தார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் பீர்பாட்டில் மற்றும் உருட்டுக் கட்டையால் ராஜஸ்ரீயை தாக்கினேன்.

இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் எனது தம்பி உதவியுடன் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசி விட்டு வந்து விட்டேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு உடந்தையாக இருந்த பிரதிஷின் தம்பியையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சிறுவர் என்பதால் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட உள்ளார்.

Tags:    

Similar News