செய்திகள்
திருமணம்

திருமண மண்டபங்களில் 50 சதவீத நபர்களை அனுமதிக்க வேண்டும்- கலெக்டரிடம் கோரிக்கை

Published On 2021-04-21 11:04 GMT   |   Update On 2021-04-21 11:04 GMT
திருமண மண்டப நிகழ்ச்சிகளில் 50 சதவீத நபர்களை அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் பூர்வா கார்க்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை திருமண மண்டப உரிமையாளர் நலச்சங்க தலைவர் இசைக்கலைவன், பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலெக்டர் பூர்வா கார்க்கிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறோம்.

அதேசமயம் திருமண மண்டபங்களை ஏற்கனவே முன் பதிவு செய்தவர்கள் 50 சதவீத நபர்களுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கும் படி கேட்டுக்கொள்கி றோம். ஏனெனில் திருமண மண்டபங்கள் 3, 4 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து அழைப்பிதழ் அச்சடித்து, உணவு தயாரிப்பவர்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் ஆயிரம் பேருக்கு குறைவின்றி உணவு தயாரிக்க சொல்லிவிட்டு அவ்வளவு விருந்தினர்களையும் பங்கேற்க அழைப்பும் விடுத்துள்ளனர். இதுபோன்ற நிலையில் அரசு திடீரென திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

இது திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரும் குடும்பத்தினருக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள திருமணங்களுக்கு மட்டுமாவது 50 சதவீத நபர்களுடன் திருமண நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News