செய்திகள்
பலி

ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

Published On 2021-04-19 04:20 GMT   |   Update On 2021-04-19 04:20 GMT
செய்யாறு அருகே ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா சின்னசெங்காடு கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன்கள் பாஸ்கரன் (வயது 9), ஹரிஹரன் (6). 2 பேரும் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளனர். மதியம் 1.30 மணியாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் தாய், மகன்கள் மதிய உணவுக்காக வீட்டுக்கு வராததால் வயல்காட்டு பகுதிக்கு தேடிச்சென்றுள்ளார். ஆனால் இருவரையும் காணவில்லை.

இதனால் சந்தேகமடைந்து அருகே உள்ள ஏரிக்கு சென்றபோது அங்கு சிறுவர்களின் செருப்பு மற்றும், ஆடு மேய்க்க கொண்டு சென்ற தழைகளை பறிக்கும் தொரட்டி இருந்தது. சிறுவர்களை காணவில்லை.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஏரியில் இறங்கி தண்ணீரில் சிறுவர்களை தேடினர். அப்போது சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News