செய்திகள்
செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 7 மாத கர்ப்பிணி பெண் தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 7 மாத கர்ப்பிணி தர்ணா

Published On 2021-04-17 13:18 GMT   |   Update On 2021-04-17 13:18 GMT
செங்கம் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 7 மாத கர்ப்பிணி துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்கரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி (வயது 21). இவரும் செங்கம் அருகே உள்ள முத்தனூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சென்னையில் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

தற்போது சுந்தரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து சிலம்பரசன் தனது வீட்டில் பெற்றோரிடம் தகவலை தெரிவித்து விட்டு சுந்தரியை தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி முத்தனூருக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை

இதனால் ஏமாற்றம் அடைந்த சுந்தரி செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து தன்னை கணவர் சிலம்பரசனுடன் சேர்த்து வைக்கக்கோரி முறையிட்டார்.

அதனை விசாரித்த மகளிர் போலீசார் சமூக நலத்துறை மூலம் சேர்ந்து வாழ இருவருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதன் பின்பும் சிலம்பரசன் தனது மனைவி சுந்தரியை அழைத்துச் செல்லவில்லை.

இந்த நிலையில் தனது புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சுந்தரி நேற்று செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சுந்தரியிடம் அங்கு வந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து தர்ணாவை கைவிட்டு சுந்தரி அங்கிருந்து சென்றார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News