பொது இடத்தில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்- கலெக்டர் பூர்வா கார்க் எச்சரிக்கை
புதுச்சேரி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின் கலெக்டர் பூர்வா கார்க் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தற்போது கொரோனா பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவக்கூடும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் நாளை முதல் அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும். எனவே, மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
தற்போது கொரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. இங்கு டாக்டர்கள் பணியில் உள்ளனர். எனவே, கொரோனா தொடர்பான சந்தேகங்கள், எங்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற சந்தேகங்களுக்கு 104 என்ற இலவச எண் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் கையிருப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.