செய்திகள்
கொரோனா நோயாளிகள் வெளியில் சுற்றி திரிந்தால் வழக்கு- கலெக்டர் எச்சரிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் வெளியில் திரிந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று தடுப்பு குறித்து கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை நோடல் அதிகாரி, தாசில்தார்கள், கொம்யூன் ஆணையாளர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவலின் நிலை, அரசு, தனியார் மருத்துவமனைகளில் காலி படுக்கைகள், வெண்டி லேட்டர் வசதி குறித்தும், ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், குயவர்பாளையம், லாஸ்பேட்டை பகுதிகளில் அதிக அளவில் தொற்று பரவியதால் அங்கு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தனிமையில் உள்ளோர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட 10 ஆயிரம் ஸ்டிக்கர்கள் உடனே வழங்க வேண்டும். தனிமையில் இருப்போரை போலீசார், வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க கலெக்டர் பூர்வாகார்க் உத்தரவிட்டார்.
கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 51 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு கொரோனா குறித்த சந்தேகம் ஏற்பட்டால் 104 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.
வீட்டு தனிமையில் இருப்போர் வெளியே திரிந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். முககவசம் அணியாமல் செல்வோருக்கு போலீசார், வருவாய் துறை, கொம்யூன் நிர்வாகத்தினர் அபராதம் வசூலிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.