செய்திகள்
கோப்புபடம்

காட்பாடியில் காதல் திருமணம் நடந்த அன்றே மாணவி மர்ம மரணம்

Published On 2021-04-16 10:22 GMT   |   Update On 2021-04-16 10:22 GMT
காட்பாடியில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போளூர்:

போளூர் அருகே உள்ள பிலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த முரளி (20) என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இதனிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியை முரளி யாருக்கும் தெரியாமல் காட்பாடி அழைத்து வந்தார்.

மகள் காணாமல் போனதால் பதட்டமடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து போளூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் முரளி நேற்று மாணவியை வள்ளிமலை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

பின்னர் காட்பாடி கிளித்தான் பட்டறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர்.

நேற்று இரவு மாணவி குளிர்பானம் குடித்தார்.சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முரளி மற்றும் அவரது உறவினர்கள் மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் போளூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மாயமான மகள் இறந்ததை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காட்பாடி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி எப்படி இறந்தார் என்பது குறித்தும் முரளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாகவும் குளிர்பானம் குடித்ததும் அவர் மயக்கம் ஏற்பட்டு இறந்ததாக முரளி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News