திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம்
திருவண்ணாமலை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மூக்குப்பொடி சித்தர் மீது பக்தி கொண்டவர்.
மேலும் அவர் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் முன்பும், தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி டி.டி.வி தினகரன் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தனது மனைவியுடன் நேற்று திருவண்ணாமலை வந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் காரில் கிரிவலம் சென்று அஷ்ட லிங்கங்களை வழிபட்டார்.
மேலும் கிரிவலப் பாதையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் சன்னதிக்கு சென்று வழிபட்டார்.
முன்னதாக அவர் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் மண்டபத்தை பார்வையிட்டார்.
வருகிற ஜூன் மாதம் அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தனது மகள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதனால் அவர் திருக்கல்யாண மண்டபத்தை மனைவியுடன் வந்து பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.