செய்திகள்
விபத்துக்குள்ளான கார் அப்பளம் போல் நொறுங்கி கிடந்த காட்சி.

விராலிமலை அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2021-04-15 16:28 GMT   |   Update On 2021-04-15 16:28 GMT
விராலிமலை அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். மேலும் அவரது தாய் படுகாயடைந்தார்.
விராலிமலை:

திருச்சி மாவட்டம், பீமநகரை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 20). இவர் திருச்சி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணேஷ் மனைவி தேவசேனா மதுரையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக காரில் சென்ற ஜெகதீஸ்வரன் நேற்று மாலை அதே காரில் தனது தாயை அழைத்துக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சிப்பட்டி பிரிவு சாலை அருகே வந்த போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் ஜெகதீஸ்வரன் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரில் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அதில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த தேவசேனாவை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெகதீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News