செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தை படத்தில் காணலாம்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.51 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2021-04-08 19:11 GMT   |   Update On 2021-04-08 19:11 GMT
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானத்தில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
ஆலந்தூர்:

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.51 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 37), முகமது அலி அக்பர் (61), தேனியை சேர்ந்த முகமது அப்துல்லா (37), சென்னையை சேர்ந்த அபு ஜாவித் (27), சிவகங்கையை சேர்ந்த ஷாஜகான் (57) ஆகிய 5 பேர் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு பாதுகாப்பு சோதனை பகுதிக்கு சென்றனர்.

அவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், 5 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது சூட்கேசின் டிராலி கைப்பிடி சற்று கனமாக இருந்தது.

உடனே சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை கழுற்றி பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக சவுதி ரியால், குவைத் தினார், அமெரிக்க டாலர், ஓமன் ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

5 பேரிடம் இருந்து ரூ.51 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News