செய்திகள்
விருத்தாசலம் பள்ளிவாசலில் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரித்த பா.ம.க. வேட்பாளர் கார்த்திகேயன்
விருத்தாசலம் பணிபூண்டார் வீதி பள்ளிவாசலில் பா.ம.க. வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு சேகரித்தார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று விருத்தாசலம் கடைவீதி அருகே உள்ள பணி பூண்டார் வீதி பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் துண்டு பிரசுரம் வழங்கி, மாம்பழம் சின்னத்துக்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, வேப்பூர் கடைவீதி, கீரம்பூர், மங்கலம்பேட்டை, பூண்டியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்த வேட்பாளர் கார்த்திகேயன், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர மாம்பழம் சின்னத்தை ஆதரித்து வெற்றி பெற செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதில் பா.ம.க. நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில்ராஜா, ஊடக பிரிவு செல்வா, கோட்டேரி தமிழ் அரிமா, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.