செய்திகள்
கம்மாபுரம் அருகே மணல் கடத்தல் - 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
கம்மாபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்மாபுரம்:
கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை தலைமையிலான போலீசார் கோ.ஆதனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள முணிமுக்தாற்றில் 4 மாட்டு வண்டிகளில் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் சின்னசாமி, செல்வராசு மகன் வேல்முருகன், திருமூர்த்தி மகன் அலெக்ஸ்பாண்டியன், தங்கவேல் மகன் மணி ஆகியோர் மணல் அள்ளி கொண்டு இருந்தனர்.
இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 4 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, கம்மாபுரம் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.