செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று - அசனா எம்.எல்.ஏ.வுக்கு பாதிப்பு

Published On 2021-03-30 06:31 IST   |   Update On 2021-03-30 06:31:00 IST
புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தினமும் அதிகரிப்பது வாடிக்கையாகி விட்டது.
காரைக்கால்:

புதுச்சேரியில் மேலும் 125 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அசனா எம்.எல்.ஏ. தொற்றால் பாதிக்கப்பட்டார்.

புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தினமும் அதிகரிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,464 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 125 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. மாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவர் பலியானார். இதனால் உயிரிழப்பு 681 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 41 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 ஆயிரத்து 554 பேர் குணமடைந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.65 சதவீதமாகவும், குணமடைவது 95.94 சதவீதமாகவும் உள்ளது.

காரைக்கால் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அசனா உள்ளார். தற்போதைய சட்டமன்ற தேர்தலிலும், இதே தொகுதியில் களம் காண்கிறார். இதற்காக கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.இந்தநிலையில் புதுவை ரோடியர் திடலில் இன்று நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அசனா எம்.எல்.ஏ. திட்டமிட்டு இருந்தார்.

இதனையொட்டி மாவட்ட நலவழித்துறை சார்பில் நேற்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அசனாவுக்கும், அவரது உதவியாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அசனா எம்.எல்.ஏ.வுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உளளது.

Similar News