செய்திகள்
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் -வேன் மோதல்: தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் சொந்த வேலை காரணமாக ஈரோடு வந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சத்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக பன்னீர்செல்வம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.