செய்திகள்
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
மணல்மேடு அருகே பனையகுடியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே பனையகுடியில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவிற்கு செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்மாற்றி உள்ளது.
இந்த வழியாக டிராக்டர், லாரி, பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலையின் வழியாக மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, சித்தமல்லி, கொண்டல் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கக்கூடிய சாலையாகவும் உள்ளது.
எனவே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இந்த சாலையில் இந்த மின்மாற்றி அமைந்து இருப்பது போக்குவரத்துக்கு பெரிதும் சிரமமாக உள்ளது. மேலும் இதன் அருகில் குடிசை வீடுகள் உள்ளதால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சாலையின் நடுவே உள்ள இந்த மின்மாற்றியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.