செய்திகள்
கிராம நிர்வாக அலுவலரின் வீட்டில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.85 ஆயிரம் கொள்ளை
சீர்காழி அருகே கிராம நிர்வாக அலுவலரின் வீட்டில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.85 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சீர்காழி:
சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் அண்ணன் கோவில் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 35). கிராம நிர்வாக அலுவலர். இவருடைய தாய் மல்லிகா (55). இவர்கள் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். உடனே தூங்கி கொண்டிருந்த மல்லிகா எழுந்து வந்து கதவை திறந்துள்ளார்.
அப்போது அந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து மல்லிகாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் வைத்திருந்த ரூ.85 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.