செய்திகள்
மயிலாடுதுறையில் தங்கை இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மயிலாடுதுறையில் தங்கை இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை திருவிழந்தூர் மேல ஆராயத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது24). தொழிலாளி. இவரது தங்கை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் வெங்கடேஷ் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். அவருக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இருப்பினும் தங்கை இறப்பை நினைத்து தினமும் மனம் வருந்தி வந்த வெங்கடேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய வெங்கடேசின் தாய் தவமணி தூக்கில் தனது மகன் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். வெங்கடேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கை இறந்த துக்கத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவிழந்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.