செய்திகள்
தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2021-03-10 02:56 IST   |   Update On 2021-03-10 02:56:00 IST
துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஆலந்தூர்:

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிஸ்மில்லா கான் (வயது 21), தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஹெப்சி பியூலா (30) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை. பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, பிடிபட்ட பிஸ்மில்லா கான், ஹெப்சி பியூலா ஆகியோரிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 870 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News