செய்திகள்
சசிகலா

அம்மாவின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன்... சசிகலா உருக்கம்

Published On 2021-03-03 17:28 GMT   |   Update On 2021-03-03 17:28 GMT
திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட, அம்மாவின் தொண்டர்கள் படுபடவேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக திடீரென அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட, அம்மாவின் தொண்டர்கள் படுபடவேண்டும். 

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்தபிறகும் அப்படித்தான் இருக்கிறேன். 

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். 

நான் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். 

இவ்வாறு சசிகலா கூறி உள்ளார்.
Tags:    

Similar News