செய்திகள்
கடலூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
கடலூர் அருகே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு மருதமலை, நகர்க்குழு பால்கி, ஆனந்த், தமிழ்மணி, வெங்கடேசன், ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளுக்கு பூ வைத்தும், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில், கியாஸ் சிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டும், மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.