செய்திகள்
பொறுப்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் நாராயணசாமி சந்திப்பு
கிரண்பேடி நீக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நாராயணசாமி அவரை சந்தித்தார்.
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடிக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கடந்த வாரம்கூட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
இதையடுத்து நேற்று திடீரென புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திரும்ப பெறப்பட்டார். புதுச்சேரி கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது மரியாதை நிமித்தமாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தமிழிசை சவுந்தரரஜனை சந்தித்தார்.