செய்திகள்
விபத்து காயம்

ஆந்திராவில் இருந்து சோளிங்கர் வழியாக செம்மரம் கடத்தி வந்த கார் பைக்கில் மோதி கவிழ்ந்தது- வாலிபர் படுகாயம்

Published On 2021-02-13 10:10 GMT   |   Update On 2021-02-13 10:10 GMT
ஆந்திராவில் இருந்து சோளிங்கர் வழியாக செம்மரம் கடத்தி வந்த கார் பைக்கில் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோளிங்கர்:

ஆந்திராவில் இருந்து சோளிங்கர் வழியாக செம்மரக்கட்டைகளை கடத்திக் கொண்டு சொகுசு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.

சோளிங்கர் அருகே அதிகாலை வந்தபோது கார் தறிகெட்டு ஓடியது. அப்போது முன்னால் சென்ற பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காரை மடக்கி பிடிக்க விரட்டி சென்றனர். அப்போது டிரைவர் காரை மீண்டும் பின் பக்கமாக இயக்கினார்.

அப்போது பின்னால் வந்த வினோத் (வயது 24) என்பவர் ஓட்டி வந்த பைக் மீது கார் மோதியது. இதில் அவர் படுகாயடைந்தார்.

தொடர்ந்து தறிகெட்டு பின் பக்கமாக வந்த கார் தரைப்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது சம்பந்தமாக பொதுமக்கள் சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மகாராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் சோதனை நடத்தினர்.

காரில் ஒரு டன் அளவிலான 16 செம்மரக் கட்டைகள் இருந்தது. ஒவ்வொரு கட்டைகளும் 2 மீட்டர் நீளத்தில் இருந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து தினந்தோறும் சோளிங்கர் வழியாக அதிவேகமாக சொகுசு கார்கள் சென்று சென்று வருகிறது. அந்த கார்களில் செம்மரம் கடத்தி வரலாம். இதனால் போலீசார் தினமும் வாகன சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News