செய்திகள்
விபத்து

வேப்பூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

Published On 2021-02-08 21:03 IST   |   Update On 2021-02-08 21:03:00 IST
வேப்பூர் அருகே லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வேப்பூர்:

சென்னை கூடுவாஞ்சேரி நந்திவரம் நாரயணபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் தஞ்சாவூர் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பினார். வேப்பூர் அருகே உள்ள அய்யனார்பாளையம் பகுதியில் வந்தபோது, திடீரென கார் பழுதாகி சாலையில் நின்றது. 

இதையடுத்து அருகில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்கள், காரை இயக்குவதற்காக சாலையில் தள்ளிக்கொண்டு சென்றனர். அப்போது, பின்னால் வந்த லாரி, காரை தள்ளி சென்றவர்கள் மீதும் கார் மீதும் மோதியது. இதில் காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் காரை தள்ளிக்கொண்டு சென்ற ஓட்டல் ஊழியர்களான சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் விஜி என்கிற தென்னவன்(22), ரவிச்சந்திரன் மகன் கலையரசன்(23) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தென்னவன் பரிதாபமாக உயிரிழந்தார். 

கலையரசனுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News